மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர் இடமாற்றம்
சென்னை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் 60 சதவீதத்துக்குக் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தண்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறையிடம் இருந்து உத்தரவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வருகிறது.
சமீபத்திய தேர்வு முடிவுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் மற்றும், எந்தெந்தப் பாடங்களில் மாணவ, மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றார்களோ அந்தப் பாடங்களின் ஆசியர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடமாற்ற உத்தவுகள் அடுத்த வாரத்தில் வெளியாகிவிடும் என்றும், கல்வித் தரத்தில் குன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.