மேட்டூருக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் கபினி நீரின் அளவு மேலும் குறைந்துவிட்டது.
கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை சூடுபிடித்ததைத் தொடர்ந்து கபினி அணை நிரம்பியது. இதையடுத்து அணையைப் பாதுகாக்க தண்ணீர் திறந்து விட்டது கர்நாடகம்.
இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 4 நாட்களாக அணைக்கு நல்ல நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத் தொடங்கியது.
தற்போது கபினியில் இருந்து அனுப்பப்படும் நீரை கர்நாடகம் வினாடிக்கு 5,000 கன அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் மேட்டூருக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 26,892 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு இது விநாடிக்கு 19,751 கன அடியாகக் குறைந்தது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 12, 896 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
மேட்டூரில் கடந்த மூன்று நாட்களில் 2 டிஎம்சி தண்ணீர் அதிகரித்துள்ளது. அணையில் இப்போது மொத்தம் 48.05 அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே, கபினி அணைக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டதாக கர்நாடகம் கூறுகிறது. அணைக்கு வினாடிக்கு 13,577 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications