கருப்பு தினம் அனுசரிக்க சென்னை வழக்கறிஞர்கள் முடிவு
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ள இம்மாதம் 24ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரையில் திட்டமிட்டபடி ஜூலை 24ம் தேதி உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. மேலும், நாகை, பெரம்பலூர் மாவட்டங்கள் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்துடன் தொடர்ந்துநீடிக்கும் என்றும் குடியரசுத் தலைவர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற மாவட்டங்கள் தொடர்ந்து மதுரைகிளையுடன் நீடிக்கும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப்பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூலை 24ம் தேதி திட்டமிட்டபடி மதுரைகிளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் கருப்பு பட்டைஅணிந்து வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் மதுரைகிளை திறக்கப்படவுள்ள 24ம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளோம்.
இதேபோல, சர்ச்சைக்குரிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்ட வழக்குகள்அடங்கிய கோப்புகளை மதுரைக்கு அனுப்பக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மதுரையில் நடைபெறவுள்ள கிளை திறப்பு விழாவை புறக்கணிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களதுமுடிவுக்கு மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் ஆதரவு தர வேண்டும். அவர்களும் நீதிமன்றப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.