ஒரே ஆட்டோவில் 23 குழந்தைகள்..
தஞ்சாவூர்:
அய்யம்பேட்டை அருகே ஒரே ஆட்டோவில் 23 குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவரை விரட்டிச் சென்று மடக்கிய தஞ்சாவூர் கலெக்டர் ராதாகிருஷ்ணன், அவனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கும்பகோணம் தீ விபத்து அதிர்ச்சியில் இருந்து தமிழகத்தைப் போலவே, கலெக்டர் ராதாகிருஷ்ணனும் இன்னும் மீளவில்லை. இந்த விபத்து நடந்தது முதல் தினமும் கும்பகோணத்துக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
இன்று காலை தஞ்சையில் இருந்து காரில் அவர் கும்பகோணம் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் குழந்தைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்ற ஆட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரை திருப்ப டிரைவருக்கு உத்தரவிட்ட கலெக்டர், ஆட்டோவை விரட்டினார்.
அதை மடக்கி நிறுத்திய கலெக்டர், அதை ஓட்டிச் சென்ற சுதாகரை திட்டித் தீர்த்தார். 94 குழந்தைகளைப் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோமே, உனக்கு அறிவில்லையா என்று ஆரம்பித்து கடுமையான வார்த்தைகளால் திட்டிய கலெக்டர், குழந்தைளை ஆட்டோவில் இருந்து இறங்கச் சொன்னார்.
போலீசாரைத் தொடர்பு கொண்டு டாக்சிகளை வரவழைத்து குழந்தைகளை தாமதமில்லாமல் பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர், ஆட்டோ டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தானும் அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த ராதாகிருஷ்ணன், ஆட்டோ டிரைவர் மீது வழக்குப் பதிவாவதை உறுதி செய்த பிறகே திரும்பினார்.
மேலும் குழந்தைகளை இப்படி பொறுப்பில்லாமல் ஆட்டோவில் ஏற்றிவிட்ட பெற்றோரிடம் இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுக்குமாறு தாசில்தாருக்கும் உத்தரவிட்டார்.
பள்ளிகளுக்கு ஆட்டோவில் குழந்தைகளை அள்ளிப் போட்டு வரும் ஆட்டோ டிரைவர்கள், அவர்களை அனுப்பி வைக்கும் பெற்றோர், இதைக் கண்டு கொள்ளாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இரங்கல் ஊர்வலங்களுக்கு தடை
இதற்கிடையே, கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்காக நினைவஞ்சலி இரங்கல் ஊர்வலங்களை நடத்துவோர் அதற்கான முன் அனுமதியை காவல்துறையிடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்பினரும் குடந்தையில் இரங்கல் ஊர்வலங்களையும், கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தினசரி ஏதாவது ஒரு ஊர்வலம், கூட்டம் நடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காவல்துறை அனுமதியுடன் மட்டுமே இனிமேல் இரங்கல் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும் என்று கும்பகோணம் துணை காவல் ஆணையர் பெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் எதையும் நடத்தவும் தடை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications