நதிகளை இணைத்தால் வறுமை ஒழியும்: வைகோ
விருதுநகர்:
நதிகளை இணைப்பதன் மூலம் வறுமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க முடியும். காவிரிப் பிரச்சினைக்கும் நிரந்தரத்தீர்வு காண முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ தனது பயணத்தின் ஒரு கட்டமாகவிருதுநகர் வந்து சேர்ந்தார். இரவு அவர் விருதுநகர் அம்மன் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, இந்தியாவில் நிலவும் ஏழ்மை, வறுமை ஆகியவற்றைப் போக்க நதிகளை இணைக்க வேண்டும்.நதிகளை இணைப்பதன் மூலம் காவிரிப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காண முடியும்.இதை வலியுறுத்தித்தான்நடைபயணம் மேற்கொள்கிறேன்.
எந்தக் குற்றமும் செய்யாத என்னை அதிமுக அரசு பொடா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளி 19 மாதங்கள் என்னைக்கொடுமைப்படுத்தியது. திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று நான் வெளியே வந்தேன்.
சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது தொகுதிக்காக எத்தனையோ நல்லவற்றைசெய்துள்ளேன். இப்போது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் பொதுத் திட்டத்தில், சேது சமுத்திரம் திட்டத்தைசேர்க்கக் காரணமாக இருந்தேன்.
தமிழகத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. தலைநகர் சென்னையில் பெண்களுக்குஉரிய பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலையும், கொள்ளையுமாக காணப்படுகிறது. அரசு செயலிழந்துபோய்க் கிடப்பதையே இது காட்டுகிறது என்றார் வைகோ.
வைகோவுக்கு வழியெங்கும் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். இன்று காலை கள்ளிக்குடிவழியாக திருமங்கலம் செல்கிறார் வைகோ. அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். இதே திருமங்கலத்தில் நடந்தகூட்டத்தில் பேசியதால்தான் பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களில் வைகோ இதுவரை 105 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்துள்ளார். இன்று இரவு அவர் மதுரைசெல்கிறார்.