பொடா ரத்தாவது மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி
சென்னை:
பொடா சட்டம் ரத்து ஆவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி விழுப்புரம் திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம்.அதையடுத்து இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய மறியலில் ஒரு லட்சம் திமுக தொண்டர்கள் கைதானார்கள்.
பொடாவுக்கு மாற்றுச் சட்டம் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அச் சட்டத்தின் தன்மை எப்படிஇருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. அவரை விடுதலைசெய்யக் கோரி நடத்தப்பட்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நான்தான் முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தேன்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு காரணமாக, இப்போது பொடா போகிறது.
யார் சொன்னாலும் வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்று கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா,இப்போது அவரே பொடா வழக்கைப் பொடக் என்று கீழே போட்டு விட்டார். எல்லாம் மக்கள் சக்தி தந்தபாடம்தான்.
பொடா சட்டம் வாபஸ் ஆகிறது என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் சூழ்நிலையில், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் என்று வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
ஒரு காரணத்துக்காக, ஒரே சட்டப் பிரிவின்கீழ் வைகோ மீதும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்டவர்கள் மீதும் பொடா வழக்குத் தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்போது வைகோ மீதான வழக்கு மட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால், நெடுமாறன் உள்ளிட்டவர்கள்மீதான வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. இந்த முரண்பாட்டுக்குப் பெயர்தான் ஜெயலலிதா ஆட்சி என்றுகூறினார் கருணாநிதி.