மதானியை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்நாசர் மதானியை பரிசோதித்து அறிக்கை தருமாறு சென்னையில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவ மையத்திற்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதானி சென்னை வந்து கே.கே.நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் செயற்கைக் கால் பொருத்திக்கொள்ளலாம் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கே.கே.நகர் மருத்துவமனை மருத்துவர்குழு கோவை மத்திய சிறைக்கு சென்று மதானியை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
மதானிக்கு செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பான முழு விவரங்களையும் பரிசோதித்து ஆகஸ்ட் 17ம்தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
மேலும், மதானியை கோவை சிறையிலிருந்து கொண்டு வராமலேயே செயற்கைக் கால் பொருத்த முடியுமா என்பதுகுறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.