தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வி
சென்னை:
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதலே அடிப்படைக் கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரும் அக்டோபம் மாதம் முதல் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.
அதே போல 6ம் வகுப்பு முதல் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்கள் பிற முன்னணி பள்ளி மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் இந்த மாற்றங்களை தமிழக கல்வித் துறை அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத்துத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயண் கூறுகையில்,
கம்ப்யூட்டர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. இதை அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 1,600 அரசுப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் கல்வி வரும் அக்டோபர் முதல் அறிமுகப்படுத்தப்படும்.
இப்போது 11ம் வகுப்பு முதல் தான் கம்ப்யூட்டர் கல்வி உள்ளது. இதை 6ம் வகுப்பு முதலே ஆரம்பித்துவிட முடிவு செய்துவிட்டோம் என்றார்.
அதே போல சோஷியாலஜி, டிராயிங் போன்ற மாணவர்களால் மிகக் குறைந்த அளவிலேயே தேர்வு செய்யப்படும் பாடத் திட்டங்களை கொஞ்சம், கொஞ்சமாக நீக்கிவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.