டாக்டரிடம் செல்ல ராமதாசுக்கு ஓ.பி. அறிவுரை
சென்னை:
குடியரசுத் தலைவர் கலாமை சந்திக்கச் சென்ற அதிமுக குழுவில் சபாநாயகர் காளிமுத்து இடம்பெற்றது தொடர்பாகபாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலாமை காளிமுத்து சந்தித்தது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக வாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சமீபகாலமாக வாசன் எது எதற்கெல்லாமோ அதிர்ச்சி அடைய ஆரம்பித்திருக்கிறார். எதையும் அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அவசர கோலத்தில் அறிக்கை விடுவதும் பேட்டி அளிப்பதும் அவருக்கு இப்போது வழக்கமாகிவிட்டது.
குடியரசுத் தலைவரை தமிழக சட்ட மன்றத்தில் உரையாற்ற சபாநாயகர் அழைப்பதுதானே முறை? இதில் என்னகுற்றம் கண்டுபிடித்தார் வாசன்?
ராமதாஸ் தனது அறிக்கையில், தூதுக்குழுவுடன் வந்து சந்திப்பதாக பொதுப்படையாக கடிதம் எழுதி அனுமதிவாங்கி விட்டு பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அதிமுகவினரை மட்டும் காளிமுத்து அழைத்துச்சென்று கலாமைச் சந்தித்திருப்பது கண்டனத்திற்குரியது; சட்டசபையில் பேச வாருங்கள் என்று அழைப்பதற்குச்சென்ற குழுவில் அதிமுக எம்.பி.க்களுக்கு என்ன வேலை? என்று கூறியிருக்கிறார்.
குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு சபாநாயகர் எவ்வாறு செல்லவேண்டும் என்று ராமதாஸ் பாடம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், தேர்ந்த அனுபவமும் உள்ளசபாநாயகருக்கு அவை எல்லாம் தெரியும்.
தொலை தூரப் பார்வையோடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை வழி நடத்தி, ஆட்சி செய்து வரும்முதல்வருடைய பாசறையில் உள்ள எங்களுக்கு ராமதாஸ் போன்றவர்கள் பாடம் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதுவேடிக்கையாக உள்ளது.
வாசன்தான் அரசியல் அனுபவம் அற்ற ஒரு அரைவேக்காடு என்றால், ராமதாசும் அந்தத் தகுதிக்குப்போட்டியிடுவது பரிதாபகரமானது.
காளிமுத்து அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவரை அழைக்கச் சென்றார்.கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கும் சபாநாயகர், குடியரசுத் தலைவரை நேரில் சென்றுஅழைப்பதுதானே மரபு?
மாநில ஆளுநர்கள் நியமனம், மாற்றம் குறித்த கோரிக்கை மனுவை கலாமிடம் வழங்கியது அதிமுகநாடாளுமன்றக் குழுத் தலைவர் நாராயணன். ஆனால் அதை காளிமுத்துதான் கொடுத்தார் என்றுநினைக்கும்படியான கருத்தை விஷமத்தனமாக வேண்டும் என்றே ராமதாசும், வாசனும் வெளியிட்டுள்ளார்கள்.
உண்மை நிலையை மறைத்து அடாவடி அரசியல் நடத்தும் ராமதாசும், அரசியலில் பாலபாடம் படிக்க வேண்டியவாசனும் ஜனநாயக மரபுகளை சபாநாயகருக்கு கற்றுக் கொடுக்க முற்படுவது வேடிக்கையானது.
அநாகரிக அரசியல் நடத்தும் ராமதாஸ், அரசியல் நாகரிகம் பற்றி அளப்பது விநோதமாக உள்ளது. ராமதாஸ்தான் என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்து பேசுகிறாரா, புரியாமல் பேசுகிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது.அவருக்கு இந்த வயதிலேயே தள்ளாட்டமும், தடுமாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல மருத்துவரை அவர் நாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.