திரைப்பட சங்கங்களுக்கு மகளிர் ஆணையம் எச்சரிக்கை
சென்னை:
தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.பெண்களை புறக்கணித்தால் சம்பந்தப்பட்ட சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர்ஆணைய உறுப்பினர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பல்துறையினருக்கும் தனித் தனியாகசங்கங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து பெப்சி என்ற பெயரில் திரைப்படதொழிலாளர் சம்மேளனம் இருக்கிறது.
சமீபத்தில் பெண் மேக்கப் கலைஞர்களை தங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க மேக்கப்மேன் சங்கம் மறுத்துவிட்டது. மேலும், பெண் மேக்கப் கலைஞர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக திரையுலகதொழிலாளர் சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அவரது பேட்டி: தென்னிந்திய திரைப்பட மேக்கப் கலைஞர் சங்கத்தில் உறுப்பினராக சேர பெண் மேக்கப்கலைஞர்களான பானு பாஷ்யம், பெர்சிஸ் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல மொத்தம் 7புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக நாங்கள் கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்துசங்கங்களிலும் பெண்கள் எந்தளவு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தினோம்.
இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், மேக்கப் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் ஆய்வுநடத்தியதில், திரையுலகில் உள்ள பல்வேறு சங்கங்களில் பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லைஎன்பது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சங்கங்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது, பெண்களையும் தங்களது சங்கத்தில்உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த உறுதிமொழியை அவர்கள் கண்டிப்பாகநிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது தொழிலாளர் நல பாதுகாப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
மேலும், ஆண்களுக்கு நிகராக பெண்களையும் மதித்து நடத்துவோம் என குறைந்தது 2 நாளிதழ்களில் விளம்பரம்கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார் நிர்மலா சீதாராமன்.