கிரிக்கெட்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி
லண்டன் - சென்னை:
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் சேலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் 23ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றிய நிலையில் கடைசிப் போட்டியிலாவதுவெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இதற்காக இந்திய அணியில் நிறைய மாறுதல்கள்செய்யப்பட்டிருந்தன. அகார்கர், பாலாஜி நீக்கப்பட்டு நெஹ்ரா, கும்ளே அணியில் சேர்க்கப்பட்டனர். ரோகன்கவாஸ்கருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதன் முறையாக சர்வதேசபோட்டியில் களமிறக்கப்பட்டார்.
டாஸ் வென்ற கங்குலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த சில மேட்ச்களில் சேவாக் சொதப்பியதால்,அவருக்குப் பதில் வி.வி.எஸ். லட்சுமண் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் இவரும் சோபிக்கவில்லை. 9 ரன்களுக்கு ஹார்மிசன் வீசிய அற்புதமான யார்க்கர் பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்து வந்த கைப், 2 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். பின்னர் சேவாக்கும் (1 ரன்) வந்த வேகத்தில்வெளியேறினார். 48 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில் களமிறங்கிய டிராவிட்பொறுப்பான முறையில் ஆடத் தொடங்கினார்.
மறுமுனையில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கங்குலி, அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். கோலிங்வுட்டின் ஒரேஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி என 13 ரன்களை விளாசினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஹார்மிசன் வீசிய பந்தை தூக்கி அடித்தார் கங்குலி. அதை வான் கேட்ச் பிடிக்க அவுட்டானார்.
3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் கங்குலி 90 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த யுவராஜ் 9 ரன்களிலும், தினேஷ்கார்த்திக் 1 ரன்னிலும் அவுட்டானார்கள். நிதானமாக விளையாடிய டிராவிடும் 51 ரன்களை எட்டிய நிலையில்ஹார்மிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மீதமுள்ள மளமளவென சரிய இந்தியா 49.3 ஓவரில் 204 ரன்களுக்கு அனைத்து விதகெட்களையும் இழந்தது.இங்கிலாந்து தரப்பில் ஹார்மிசன் அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ரன்களை குறைவாகவே எடுத்திருந்தாலும், இந்திய அணி நேர்த்தியான பந்து வீச்சு மூலம் இங்கிலாந்துபேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தது. நெஹ்ராவும், பதானும் அடுத்தடுத்து விதகெட்களை கழட்ட, ஒருகட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி திணறியது.
பின்னர் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், கைல்ஸ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து,சரிவிலிருந்து ஓரளவுக்கு அணியை மீட்டது. இந் நிலையில் 42வது ஓவரை வீச வந்த ஹர்பஜன் சிங், கைல்ஸ்விக்கெட்டை வீழ்த்தினார். இதே ஓவரின் கடைசி பந்தில் மைக்கேல் வானை, இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ்கார்த்திக் அற்புதமாக ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 48.2 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்விஅடைந்தது. இந்திய தரப்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களையும், நெஹ்ரா 3 விக்கெட்களையும், பதான் 2விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கங்குலியும், தொடர் நாயகனாக ஹார்மிசனும் தேர்வுசெய்யப்பட்டனர்.
ரூ.1, 500 கோடிக்கு ஜீ டிவிக்கு ஒளிபரப்பு உரிமை
இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் போர்ட் கூட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குஇந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை "ஜீ டிவி ரூ.1,500 கோடிக்குவாங்கியது.
இந்த உரிமையை பெற "ஜீ டிவி நிறுவனம், ரூ.1,200 கோடி ரூபாயையும், ஈ.எஸ்.பி.என். ஸ்டார் "டிவி நிறுவனம்1,060 கோடி ரூபாயையும் தருவதாக ஒப்பந்தத்தில் கூறியிருந்தன. பின்னர் இந்திய கிரிக்கெட் போர்டு இரு டிவிநிறுவன அதிகாரிகளிடமும் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒளிபரப்பு உரிமையை வழங்க ரூ.1,500 கோடிரூபாயை நிர்ணயித்தது. இதை இரு டிவி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டன.
இருப்பினும் ஒளிபரப்பு உரிமை ஜீ டிவிக்கே வழங்கப்பட்டது. ஒப்பந்தப் படிவத்தில் ஜீ டிவி அதிக தொகைகுறிப்பிட்டிருந்ததால், அதற்கே ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டதாக கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக் மோகன்டால்மியா தெரிவித்தார்.