ஜெ. வெள்ளி விழா கொண்டாடுவார்: வாசன்
சென்னை:
அமைச்சரவை மாற்றத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளி விழா கொண்டாடினாலும் ஆச்சரியப்பட முடியாது என மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கிண்டலடித்தார்.
நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுத்து வரும் பா.ஜ.கவுக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த சென்னை பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் பேசியதாவது:
மக்களவைத் தேர்தல் தோல்வியால் கடும் வெறுப்பில் இருக்கிறது பா.ஜ.க. அந்த பா.ஜ.கவுக்கு துணை போகிறது அதிமுக.
காழ்ப்புணர்ச்சி அரசியல் நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதைக்காகக் கூட சந்திக்கவில்லை. இவர் எப்படி மத்திய அரசிடம் திட்டங்களைக் கேட்டுப் பெறுவார்.
அமைச்சர்கள் மாற்றம் என்ற கோலிக் கூத்து வேறு. இதுவரை 16 முறை மாற்றிவிட்டார். விரைவில் இந்த விஷயத்தில் ஜெயலலிதா வெள்ளி விழா கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை.
இந்தியாவிலேயே கடைசி முதல்வராக தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியா டுடேயின் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. இது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், 6 கோடி தமிழர்களுக்கும் நேர்ந்துள்ள அவமானம் என்றார்.
ராமதாஸ்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் பாழாகிவிட்டதாக வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் தலையங்கள் எழுதும் அளவுக்குப் போய் விட்டன பா.ஜ.கவின் செயல்கள்.
சிபு சோரனுக்கு, லாலுவுக்கு ஒரு நிலை. அதே நேரம் உமா பாரதிக்கு ஒரு நிலை. இரட்டை வேடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
நாட்டிலேயே ஜெயலலிதாவைவிட கறை படிந்த கரம் கொண்ட யாராவது இருக்க முடியுமா?. அவரது ஆட்சியை விரட்டவும், பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டவும் திமுகவுடன் இணைந்து போராடுவோம் என்றார்.
என்.வரதராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதாஜன் கூறியதாவது:
ஜனநாயகப்படி நடக்க விட மாட்டோம் என்று பா.ஜ.க. கோர தாண்டவம் ஆடுகிறது. இந்த நிலை நீடிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. மதவெறிக் கூட்டமான பா.ஜ.கவால் மக்களவைத் தேர்தலில் அயோத்தி, மதுரா, வாரணாசியிலும் கூட மண்ணைத் தான் கவ்வ முடிந்தது.
சலுகைத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் ஜெயலலிதா. இதுவும் பாசிசம் தான் என்றார்.
நல்லகண்ணு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு பேசுகையில்,
ஜனநாயகத்துக்கு பாஜகவும் அவர்களது தோழமைக் கட்சியான அதிமுகவும் தருகின்ற மரியாதை உலகறிந்தது. தமிழக சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏக்களை அழைப்பதற்குப் பதிலாக ஜனாதிபதியை அனைத்து பெருமை தேடிக் கொள்ளப் பார்க்கிறார் சபாநாயகர்.
ஹிட்லரும் அத்வானியும் ஒன்று தான். முசோலினியும் ஜெயலலிதாவும் ஒன்று தான். ராமனைப் பற்றிப் பேசி ஓட்டு வாங்கி, வர்ணாஸ்ரம ஆட்சி நடத்த நினைத்தார்கள், நல்லவேளை தோற்றார்கள். இல்லாவிட்டால் நாடு குட்டிச்சுவர் ஆகியிருக்கும்.
பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று ஜெயலலிதா சொன்னதை முதலில் கொலைகார நரேந்திர மோடியும், இப்போது சத்தீஸ்கர் பா.ஜ.க. முதல்வரும் ஆதரித்து லெட்டர் அனுப்பியிருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேருகிறது என்றார்.
எல். கணேசன்:
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன பேசுகையில், நடந்து முடிந்த தேர்தல் ஒத்திகை தான், அரங்கேற்றம் அல்ல. அதிமுக அரசை தூக்கி எறியும் சட்டமன்றத் தேர்தல் தான் அரங்கேற்றமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications