கிருஷ்ணா நீர்: ஆந்திராவில் தமிழக அதிகாரிகள்
சென்னை:
கிருஷ்ணா நதிநீர் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் குழு ஆந்திர அதிகாரிகளுடன் இன்றுபேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கிருஷ்ணா தண்ணீர் தந்து உதவுமாறு ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
ஆந்திர அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறந்து விட இயலாது என்று ராஜசேகரரெட்டி பதில் கடிதம் எழுதினார். இதனையடுத்து தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீரைதமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று ராஜசேகர ரெட்டிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதினார்.
இந் நிலையில் ஆந்திராவில் நிலவும் உண்மை நிலையை நேரில் கண்டறிய தமிழக பொதுப்பணித்துறை மற்றும்சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் குழு ஆந்திரா செல்கிறது.
சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நடராஜன், கண்காணிப்பு பொறியாளர்பாண்டியராஜன், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்டோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இன்று கண்டலேறு அணைக்குச் சென்று நீர் இருப்பை பார்வையிடுகிறார்கள். அங்கு ஆந்திர மாநிலபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பின்னர் இன்று இரவே சென்னைதிரும்புகிறார்கள்.