மதுரை உயர் நீதிமன்ற கிளை அமைத்தது செல்லும்
சென்னை:
மதுரையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை அமைப்பது தொடர்பான குடியரசுத் தலைவரின் பிரகடனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி பிரபா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இறுதித் தீர்ப்பைஅளித்துள்ளது.
அதில், மாநில மறு சீரமைப்பு சட்டம் 51(2)வது பிரிவின் கீழ் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது சட்டப்படி செல்லும்.மாநில மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய மாநிலமாகவே தமிழ்நாடு கருதப்பட வேண்டும்.
எனவே அந்தச் சட்டத்தின் கீழ் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை நிறுவியதில் எந்த சட்ட மீறலும் இல்லை.
பழைய மாநிலம், புதிய மாநிலம் என்ற பாகுபாட்டை மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எனவே மதுரையில் அமைந்துள்ள புதியஉயர் நீதிமன்றக் கிளை சட்டப்படி செல்லுபடியாகும்.
குடியரசுத் தலைவர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாகப்பட்டனம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் மதுரை கிளையில் இடம்பெறாது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள 9 நீதிபதிகள் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது உள்ள 49 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை 59 ஆக அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசும்டிசம்பர் 31ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கும் கூடுதல் நீதிபதிகளை நியமிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.