செக் மோசடி: ஏ.எம்.ரத்னத்திற்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை:
காசோலை திரும்பி வந்த வழக்கில் நவம்பர் 3ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்குசென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த மைன்ட் ஸ்க்ரீன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவி சீனிவாசன் என்பவர்இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவிஸ் தயாரித்த பாய்ஸ் படத்திற்கு தேவைப்பட்டபொருட்கள், ஆட்களை எங்களது நிறுவனம் வழங்கியது.
இதற்கான கட்டணத்தை ஏ.எம்.ரத்னம் கொடுத்தார். இருப்பினும் ரூ. 2.46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் திருப்பித் தரவில்லை.மாறாக அவற்றை தனது சூர்யா மூவிஸ் நிறுவனத்தின் வளசரவாக்கம் அலுவலகத்திலேயே வைத்துக் கொண்டார்.
இதுகுறித்து கேட்டபோது, அதற்குரிய தொகையைத் தந்து விடுவதாகக் கூறிய ரத்னம், 2004ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகியமாதங்களில் ரூ. 6.50 லட்சத்துக்கு காசோலைகள் வழங்கினார்.
இதில் ரூ. 2.50 லட்சத்திற்கான இரண்டு காசோலைகள் வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்து விட்டன. இதுதொடர்பாக ரத்னத்திற்குகடந்த ஆகஸ்ட் 30ம் தேதி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் பதில் ஏதும் வரவில்லை என தனது மனுவில் அவர்கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி நவம்பர் 3ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏ.எம்.ரத்னத்திற்கு உத்தரவிட்டார்.