மகாராஷ்டிரா: மீண்டும் காங் கூட்டணி வெற்றி
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி தோல்வியைத் தழுவியுள்ளது.
288 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க 144 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்கூட்டணி 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க-சிவசேனை கூட்டணி 118 இடங்களில் வென்றுள்ளது.
சுயேச்சைகள் 19 இடங்களிலும், 3 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மற்றவற்றில் சிறிய கட்சிகளும் வென்றுள்ளன. வெற்றி பெற்றசுயேச்சைகளில் பெரும்பாலானவர்கள் இரு கூட்டணிகளையும் சேர்ந்த அதிருப்தியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 144 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவுள்ளது.
கூட்டணியில் காங்கிரசைவிட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளதால் முதல்வர் பதவி தங்களுக்கே வழங்கப்படவேண்டும் என பவாரின் கட்சியைச் சேர்ந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், முதல்வர் காங்கிரசைச்சேர்ந்தவராகத் தான் இருப்பார் என இன்று சரத்பவார் டெல்லியில் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நாளை புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது. அதில் முதல்வர் பதவிக்கான தலைவர்தேர்ந்தெடுக்கப்படுவார். சரத்பவாரின் கட்சி ஆதரவுடன் அவர் ஆட்சியமைப்பார். பெரும்பாலும் இப்போதைய முதல்வர் சுஷில்குமார்ஷிண்டேவையே மீண்டும் சோனியா காந்தி முதல்வராக்குவார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணியும் பா.ஜ.க கூட்டணியும் சமமான இடங்களில் வெல்லும் என்றும்,யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கூறப்பட்டது. இதனால் அடுத்து ஆட்சியைப் பிடிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் இரு கூட்டணிகளையும் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் முன்னணியில் உள்ள சுயேச்சைகளுக்கு வலை வீச ஆரம்பித்தனர்.அவர்களுடன் குதிரை பேரம் நடத்தி வந்தனர்.
ஆனால், சிவசேனையும் பா.ஜ.கவும் எதிர்பார்த்த அளவுக்கு அதிக இடங்களில் வெல்லவில்லை. 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் கூடகாங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் பெருவாரிய இடங்களைப் பிடித்துள்ளது.
பா.ஜ.க- சிவசேனைக் கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை, கொங்கன், வட மகராஷ்டிராவில்காங்கிரஸ் கூட்டணியே வென்றுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் தனது பலத்தை நிரூபிக்க பா.ஜ.கவுக்கு விடப்பட்டசவாலாக மகாராஷ்டிர தேர்தல் அமைந்திருந்தது. ஆனால், இதிலும் அக் கட்சி தோல்வியே கண்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் பிகார், ஹரியாணா போன்ற சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அம் மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் மக்களைத் தேர்தல் தோல்வியில் இருந்து மீள மகாராஷ்டிர தேர்தலையே அக் கட்சி நம்பியிருந்தது.ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக பா.ஜ.கவுக்கு தோல்வி கிடைத்துள்ளது.
சிவசேனையில் பால் தாக்கரேயின் மகனுக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் கோஷ்டி மோதலால் கட்சி பிளவுபட்டு கிடக்கிறது.இதுவும் இக் கூட்டணியின் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தோல்வி குறித்து விவாதிக்க இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் மூத்த பா.ஜ.க. தலைவர்களின் கூட்டம் நடந்தது.அதில் அத்வானி, ஜஸ்வந்த் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, இதுஎங்கள் கட்சிக்கு விடப்பட்ட சவால். இதை எதிர் கொள்வோம் என்றார்.
பா.ஜ.கவின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொறுப்பை ஏற்று நடத்திய பிரமோத் மகாஜன் தான் மகாராஷ்டிர தேர்தலையும் கவனித்தார்.இரண்டு முறையும் தொடர் தோல்விகள் ஏற்பட்டுள்ளதால் கட்சியில் அவருக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஜேட்லியிடம் கேட்டபோது, தனிப்பட்ட யார் மீதும் பழி போட மாட்டோம். இது கட்சிக்குக் கிடைத்த ஒட்டுமொத்தத் தோல்விஎன்றார்.