மதானி விவகாரம்: ஜெவை சந்திக்கும் கேரள முதல்வர்
சென்னை:
பரம்பிக்குளம்- ஆழியாறு நதி நீர்ப் பிரச்சினை, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மதானியை விடுதலை செய்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன்விவாதிப்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி வரும் நவம்பர் 4ம் தேதி சென்னை வருகிறார்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே பரம்பிக்குளம்-ஆழியாறு நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாகஅமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை இருமாநில முதல்வர்களிடையே நடைபெறவுள்ளது.
இது குறித்து திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர்திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் குன்னாலிக்குட்டி ஆகியோரும் என்னுடன் சென்னைவருவார்கள் என்றார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அப்துல் நாசர் மதானியை கோவை சிறையிலிருந்து விடுவிப்பதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசுவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க உம்மன்சாண்டி மறுத்துவிட்டார்.
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மதானி.இவரை விடுவிக்க வேண்டும் என கேரளாவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இதனால் இது குறித்தும் ஜெயலலிதாவுடன் உம்மன் சாண்டி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதானியை விடுவிப்பது தொடர்பாக ஜெயலலிதாவுடன் பேச வேண்டும் என்று கேரள மாநில தொழில்துறைஅமைச்சரும், அம் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் (காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய கட்சி இது)பொதுச் செயலாளருமான குன்னாலிக்குட்டி பகிரங்கமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மதானியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெவிக்கக்கூடாது என்று கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் உம்மன் சாண்டியின் வருகைமுக்கியத்துவம் பெறுகிறது.
சிறையில் எம்எல்ஏக்களுக்கு நோ எண்ட்ரி:
இதற்கிடையே மதானியை சந்திக்க வந்த இரு கேரள மாநில எம்.எல்.ஏக்களுக்கு சிறை அதிகாரிகள் அனுமதிமறுத்துள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் சதீசன் மற்றும் பிரதாபன் ஆகிய இருவரும் கோவை மத்திய சிறைக்கு வந்தனர். கேரள மாநிலசபாநாயகர் கொடுத்த ஒரு கடிதத்தைக் காட்டி, மதானியை சந்திக்க தங்களை அனுமதிக்குமாறு கோரினர்.
ஆனால் தங்களுக்கு இதுதொடர்பாக எந்த உத்தரவையும் மேலதிகாரிகள் பிறப்பிக்கவில்லை என்று கூறிவிட்டனர்சிறை அதிகாரிகள்.
இதனால் அதிருப்தியடைந்த இருவரும் சிறை வாசலில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறினர்.பிேன்னர் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் தொலைபேசியில் பேசினர். அவர்களிடம் மறியல் செய்யவேண்டாம் என்று உம்மன் சாண்டி கூறியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து இரு எம்.எல்.ஏக்களும் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் தான் ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் உம்மன் சாண்டி.