விஷம் வைத்து கொல்லப்பட்டான் வீரப்பன்: கூட்டாளி
கோவை:
சந்தனக்கடத்தல் வீரப்பன் விஷம் வைத்து கொல்லப்பட்டான்; ஆம்புலன்ஸ் ஆபரேஷன் முழுக்க முழுக்க நாடகம்என்று வீரப்பனிடம் கூட்டாளியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
பழனியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவர் வீரப்பனுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்தவர்.வீரப்பனின் 3 கூட்டாளிகள் நெற்றிக்கண் ஆசிரியர் மணி மூலம் போலீசில் சரண் அடைந்தார்கள். இதற்குகாரணமாக இருந்தவர் கிருஷ்ணமூர்த்திதான்.
வீரப்பனுடனான தொடர்பு காரணமாக கிருஷ்ணமூர்த்தி தடா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில் நெற்றிக்கண் மணி, அவரது நிருபர் பாயும் புலி, புகைப்படக்காரர் ரிச்சர்டு மணி, வழக்கறிஞர்கிருஷ்ணசாமி ஆகியோர் வீரப்பனை சந்திக்க சென்றார்கள். அப்போது 4 பேரையும் வீரப்பன் பிணை கைதியாகபிடித்து கொண்டு, கிருஷ்ணமூர்த்தியை விடுதலை செய்தால் தான் இந்த 4 பேரையும் விடுவிப்பேன் என்றுஅதிரடிப்படைக்கு வீரப்பன் கேசட் அனுப்பினான்.
ஆனால், பின்னர் தானே மனமிறங்கி அவர்களை வீரப்பன் விடுவித்தான்.
காலப்போக்கில் கிருஷ்ணமூர்த்தி மீதான தடா வழக்கை அரசு வாபஸ் பெற்றதோடு அவரை விடுதலை செய்தது.
இந் நிலையில் வீரப்பனை அதிரடிப் படையினர் விஷம் வைத்து கொன்றதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கிருஷ்ணமூர்த்தி. இது தொடர்பாக அவர் கூறியதாவது:
வீரப்பனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரேகெளடா 3 பேருமேஎப்போதும் விழிப்பாக இருப்பார்கள். தூங்கும் போது தனி தனியாக தான் தூங்குவார்கள். அப்போதும் யாராவதுஒருவர் கண்விழித்து காவலுக்கு இருப்பார்கள்.
வீரப்பன் காட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டான். வீரப்பனின் உளவாளியை அதிரடிப்படையினர்தங்களது வலையில் சிக்க வைத்து, அந்த நபர் மூலமாக வீரப்பனின் கதையை முடித்திருக்கிறார்கள்.
இந்த உளவாளி மூலம் வீரப்பனோடு நெருங்கிப் பழகி அவனுடைய நம்பிக்கையை பெற்ற பின்னர் வீரப்பனுக்கும்,அவனது கூட்டாளிகளுக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொலை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஆம்புலன்சுக்குள் போட்டு கொண்டு வந்து சாலையோரத்தில் அதை நிறுத்தி வேனை சுற்றி நின்றுதுப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். மேலும் தங்கள் நாடகத்திற்கு வலு சேர்க்க வீரப்பனோட மீசையையும்அதிரடிப்படையினர் எடுத்து இருக்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் ஆபரேசன் முழுக்க, முழுக்க நாடகம்தான்என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
இதற்கிடையே கொஞ்ச காலம் வீரப்பனுடன் இருந்துவிட்டு காட்டைவிட்டு வெளியே வந்த வேலூர் சுத்தாழம்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, வீரப்பன் சுட்டு கொல்லப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அதிரடிபடை போலீஸ்காரர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் இதுவரை சிவகுமார் வீடு வந்து சேரவில்லை. இது குறித்து சிவகுமாரின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில்ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.