பர்னாலா பதவியேற்பு; கரை வேட்டிகளின் சங்கமம்
சென்னை:
தமிழக ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா பதவியேற்ற நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு விரோதமாக அனைத்துக் கட்சிகளைச்சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு விழா எதுவாக இருந்தாலும் அதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.இது நேற்று சற்று மாறியது.
கடந்த முறை ஆளுநராக ராம்மோகன் ராவ் பதவியேற்றபோது தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதற்கு முன்பும் இதுபோலவே நடக்கும்.
ஆனால் பர்னாலா ஆளுநராகப் பதவியேற்றபோது காட்சி மாறியிருந்தது. முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள் ஆகியோர் வழக்கம்போல ஆஜராகியிருந்தனர்.
இவர்கள் தவிர திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன்,சட்டசபைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இதை விட ஆச்சரியமாக நிதியமைச்சர் பொன்னையன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.மறுபக்கம், ஓ.பன்னீர் செல்வமும், சபாநாயகர் காளிமுத்துவும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஆளுநர் பதவியேற்புக்குப் பின்னர் நடந்த தேநீர் விருந்திலும் இந்த காட்சி மாற்றம் தொடர்ந்தது. ஸ்டாலினுடன் காளிமுத்து பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ஸ்டாலின் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டது குறித்தும், இப்போது எப்படி உள்ளது என்றும்அக்கறையாக விசாரித்துக் கொண்டிருந்தார் காளிமுத்து.
எதிரும் புதிருமாக இருப்பவர்கள் இப்படி இயல்பாக பேசிக் கொண்டிருந்தது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications