பெட்ரோல் விலை: மத்திய அரசு மோசடி- ஜெ. தாக்கு
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காட்டமான 4 பக்க அறிக்கை விவரம்:
தீபாவளி நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய மத்திய அரசு, இந்த விலை உயர்வால் மக்கள் மீது பெரும் பாரத்தைசுமத்தியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளாகும் என்பதை மத்திய அரசுநினைத்துக் கூட பார்க்கவில்லை.
தமிழகத்தில் இருந்து 12 அமைச்சர்களைக் கொண்ட இந்த அரசு, மக்களுக்குத் தந்த உறுதிமொழிகளைத் தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. குறிப்பாக கிராமப் பகுதி ஏழை மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.
கடந்த 5 மாதங்களில் 3 முறை எரிபொருள்களின் விலையை உயர்த்திய மத்திய அரசின் இந்த மோசமான செயலை மக்கள் நிச்சயம்மறக்க மாட்டார்கள்.
இதன் மூலம் ஆட்சியில் இருந்த மிகக் குறுகிய காலத்திலேயே மக்களிடம் அதிகபட்சமான கெட்ட பெயரை வாங்கிய அரசு என்றவரலாற்றுப் பெருமையை காங்கிரஸ் கூட்டணி அரசு பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோலிய பொருட்களின் விலை உயராது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சர்வதேசஅளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வரும் நிலையில் இங்கு மட்டும் விலையை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
இதன் மூலம் இது ஒரு மக்கள் விரோத அரசு என்று உறுதியாகிவிட்டது. வாக்களித்த மக்களை இந்த அரசு முழுமையாகஏமாற்றிவிட்டது. அடுத்தடுத்து அதிர்ச்சி தந்து மக்களை வாட்டி வரும் மத்திய அரசால் ஏழைகள் மிகக் கடுமையானபாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நாட்டின் பண வீக்கமும் அதிகரித்து, விலை வாசியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டெரின் விலையை 20 ரூபாய் அதிகரித்துவிட்டதோடு இனி மாதந்தோறும் ரூ. 5 உயர்த்தப் போவதாகஅறிவித்துள்ளார்கள். இது போன்ற மாதாமாத விலையுயர்வை நாம் எஙகேயாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
மண்ணெண்ணெய் விலையை உயர்த்தவில்லை என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால், ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும்மண்ணெண்ணெயின் அளவை சத்தமில்லாமல் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ரேசன் கடைகளுக்கு மாதத்துக்கு 1,00,219 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை. ஆனால், வெறும் 58,392 கிலோ லிட்டரைத் தான் மத்திய அரசுவழங்கியிருக்கிறது.
இதன் மூலம் மக்களை மோசடி செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.