வரும் 10ம் தேதி டிஜிபி அலுவலகத்திற்கு ஜெ. அடிக்கல்
சென்னை:
தரமணியில் கட்டப்படவிருக்கும் புதிய டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருகிற 10ம் தேதி முதல்-வர் ஜெயலலிதா அடிக்கல்நாட்டுகிறார்.
சென்னை கடற்கரை சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் பழையதாக இருப்பதாலும், போதுமான அறைகள் இல்லாததாலும் டி.ஜி.பி.அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி தரமணியில் 24 ஏக்கரில் ரூ.30 கோடி செலவில் புதிய டி.ஜி.பி. அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்த புதிய டி.ஜி.பி. அலுவலகம் நவீன வசதிகளுடன் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்கும்.
ரூ.48 கோடி செலவில் வண்டலூரை அடுத்த உமாஞ்சேரி என்ற இடத்தில் 132 ஏக்கர் நிலத்தில் போலீஸ் அகாடமி கட்டப்படுகிறது.இந்த பயிற்சி மையத்தில் வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை வீரர்களை போற்றும் வகையில் நினைவுச் சின்னமும்அமைக்கப்படுகிறது.
இந்த இரண்டு பணிகளும் ஒரு ஆண்டுக்குள் முடித்து கொடுக்கும்படி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்துக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10ம் தேதி காலை 10.45 மணிக்கு தரமணியில் நடைபெறுகிறது. ஜெயலலிதா விழாவில்கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
அதோடு விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் ராமநாதபுரம்,விழுப்புரத்தில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்ட மண்டல அறிவியல் கைரேகை ஆய்வகத்தையும் ஜெயலலிதா திறந்துவைக்கிறார்.
சென்னை நகரில் வேப்பேரி, அயனாவரம், வடபழனி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, உயர் நீதிமன்றம், எழும்பூர் ஆகியஇடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.