வரும் 27ம் தேதி தமிழக, கேரள அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை:
பரம்பிக்குளம், -ஆழியாறு நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக வருகிற 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் தமிழக, -கேரள அமைச்சர்கள்பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பரம்பிக்குளம் ,-ஆழியாறு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் சென்னை தலைமைச் செயலகத்தில் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் உம்மன் சாண்டி அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இப்பிரச்சினை 1988-லிருந்து உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 17 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருக்கிற தண்ணீரைப்பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் தமிழகத்துக்குத் திருப்பி விடுவது குறித்து இக் கூட்டத்தில் பேசவில்லை.
தமிழகத்தின் பிரச்சினைகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் கேரளத்தில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில்தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று, ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம். ஏற்கெனவேஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளோம்.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இம்மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
கோவை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மதானியைப் பற்றியோ,அவரை விடுதலை செய்வது பற்றியோ ஜெயலலிதாவிடம் பேசவில்லை
சிறைக்குச் சென்று மதானியைச் சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார் உம்மன் சாண்டி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் ஜெயலலிதாவுடன் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரளத்தின் சார்பில் உம்மன் சாண்டியுடன் அந்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், தொழில்அமைச்சர் குஞ்ஞாலிக்குட்டி, தலைமைச் செயலாளர் பாபு ஜேகப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.