ஹே ஹை.. குதிரைக்கு மாறும் மக்கள்!
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வையடுத்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலரும் பாரம்பரியமான குதிரை மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குமாறி வருகின்றனர்.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் படு பயங்கரமாக ஏறி வருகிறது. இதனால் ஆட்டோக்காரர்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவருகின்றனர். இதனால் சாதாரண மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல கடனை உடனை வாங்கி, கஷ்டப்பட்டு இரு சக்கர மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்து ஓட்டி வருபவர்கள் மிகவும் சிக்கலானநிலையில் உள்ளார்கள். பெட்ரோல் போட்டு மாள முடியாமல் அவர்கள் சைக்கிள்கள் அல்லது அரசு பேருந்துகளுக்கு மாறி வருகிறார்கள்.
இந் நிலையில் சென்னைப் புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநில்லூர் ஆகிய இடங்களில் மீண்டும் குதிரைவண்டிகளுக்கு மவுசு கூடியுள்ளது.
இப் பகுதிகளில் ஜட்கா எனப்படும் குதிரை வண்டிகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அதில் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததால் வண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது.
தற்போது பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில உயர்ந்து வருவதால் குதிரை வண்டிகளுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது.
6,7 பேர் கூட அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் இதில் பயணிக்க முடிகிறது.
ஆதம்பாக்கம் பகுதியில் மொத்தம் 2 குதிரை ஸ்டாண்டுகள் உள்ளன. இந்த ஸ்டாண்டுகளில் மொத்தமாக 10 குதிரை வண்டிகள் உள்ளன. 10வண்டிகளும் இப்போது பிசியாக உள்ளன. முன்பெல்லாம் மாலைக்கு மேல்தான் இந்த வண்டிகள் படு பிசியாக இருக்கும். இப்போதோ,காலை முதலே பிசியாக உள்ளன.
பெட்ரோல் விலை தொடர்ந்து நீடித்தால் சென்னை முழுவதுமே குதிரை வண்டிகள் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.