வெள்ள சேதம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.411.73 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-வர்ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில பெய்த பலத்த மழை காரணமாக திருவாருர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக இயற்கை சீற்ற நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்கப்பட்டது. வெள்ளசேதங்களை மதிப்பீடு செய்ய அதிகாரிகளை கொண்ட 2 குழுக்களும் அமைக்கப்பட்டன.
பலத்த மழை காரணமாக 30 முதல் 45 நாள் நாற்றுக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளர்.ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். ஏரிகள் உடைந்து முக்கிய சாலைகளும் சேதம் அடைந்துள்ளன.
இப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரழிவு நிவாரணநிதியில் இருந்து போதிய அளவு ஒதுக்கீடுசெய்யப்படவில்லையென்றால், நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாகிவிடும்.
வெள்ளச்சேத பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட 2 குழுவினர் தாக்கல் செய்த அறிக்கை இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டது. வெள்ளநிவாரண உதவிக்கு ரூ.411.73 கோடி தேவைப்படுகிறது.
வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும், நிவாரணபணிகளைமேற்கொள்ள தேசிய பேரழிவு நிவாரண நிதியில் இருந்து போதிய தொகை வழங்க சிபாரிசு செய்யும்படியும் தங்களைகேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.