ஜாமீன் மனு மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இம் மனுவை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர் இதை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.இதையடுத்து இன்று காலை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அரசு வழக்கறிஞர்,
சங்கராச்சாரியாரின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கூடுதல் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அதன் நகலை நேற்றுஇரவில் தான் எனக்குத் தந்தனர். இதனால் அதைப் படித்துப் பார்க்க எனக்கு அவகாசமில்லாமல் போய்விட்டது. அதைப்படித்துவிட்டு வாதம் செய்ய எனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதி உணவு இடைவேளைக்குப் பின் (2.15 மணிக்கு) மீண்டும் இந்த மனு மீதான விசாரணை நடக்கும் என்றுஅறிவித்தார்.
இதையடுத்து பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அரசு வழக்கறிஞர் பல சாட்சியங்களை முன் வைத்துப் பேச அதற்குசங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இரு தரப்பினரும் தொடர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வாதங்கள் நிறைவடையாததையடுத்து விசாரணை நாளையும் நடைபெறும் என அறிவித்தார் நீதிபதி.
நீதிபதி பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதால் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில்நடக்கும் வழக்குக்கு எந்தத் தடையும் இருக்காது. சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் எடுக்க காவல்துறையால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை அந்த நீதிமன்றம் திட்டமிட்டபடி நாளை விசாரிக்கலாம் என்றார்.
இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்ததையொட்டி ஏராளமான பொது மக்களும், ஜெயேந்திரரின் ஆதரவாளர்களும்,இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.
கடந்த முறை விசாரணை நடந்தபோது ஜெயேந்திரரின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டமோதலில் வழக்கறிஞர்கள் உள்பட சிலர் தாக்கப்பட்டனர். எனவே இன்று அத்தகைய மோதல் எதுவும் ஏற்படாமல் தடுக்க உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.