பள்ளிகள் நேரம் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சட்டசபையில் கல்வி அமைச்சர் சண்முகம் இன்று கூறினார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன் எம்.எல்.ஏ., அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் பற்றியகவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்து சண்முகம் பேசியதாவது:-
2001--2002 கல்வி ஆண்டு வரை தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் தொடங்கும் நேரம் காலை 8 மணி, 9 மணி, 9.30மணி, 10.30 மணி என்று வெவ்வேறாக இருந்தது.
இதை சீரமைக்கும் நோக்கத்தில் 2002--2003 கல்வி ஆண்டு முதல் நகர்புறங்களில் காலை 8.30 மணியிலும், கிராமப்புறங்களில்காலை 9 மணியிலும் பள்ளிகளைத் தொடங்குவது நடைமுறைப்படுத்தப்பட்டது.
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை எப்போதும்போல் காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியின்மை, காலை உணவு உட்கொள்ள முடியாதசூழ்நிலை, பள்ளிகள் சீக்கிரமே தொடங்கி விடுவதால் பெற்றோர் அனுபவிக்கும் சிரமங்கள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம்இருந்து புகார் மனுக்கள் வந்தன.
அவற்றைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கவும்,
சென்னை நகரில் போக்குவரத்து வசதிகள், போக்கு வரத்து நெரிசல்கள், பள்ளிகளின் அமைவிடம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு காலை 8.30 மணி அல்லது 9 மணி அல்லது 9.30 மணி இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தில் பள்ளிகள் தொடங்கவும்உத்தரவிட்டுள்ளார்.
இந்த நேர மாற்றம் வரும் திங்கட்கிழமை முதல் (22ம் தேதி) அமுலுக்கு வருகிறது என்று சண்முகம் தெரிவித்தார்.