வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம்: அத்வானி
ராஞ்சி:
சங்கராச்சாரியார் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானிகோரியுள்ளார்.
இதுவரை விஎச்பி சார்பில் வைக்கப்பட்டு வந்த இந்தக் கோரிக்கையை இப்போது பா.ஜ.கவும் வலியுறுத்தியுள்ளது.
ராஞ்சியில் நடந்து வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது நிருபர்களிடம் பேசிய அத்வானி,
சங்கராச்சாரியார் நடத்தப்படும் விதத்தைப் பார்த்து, நாடு கொதித்துப் போயுள்ளது. இதனால் அவர் மீதான அனைத்து வழக்கு,விசாரணைகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
இதில் முடிவெடுக்க வேண்டியது நீதித்துறை தான். இப்போதைய சூழலில் இது அவசியமானதாகவே படுகிறது. வழக்குகளைதமிழகத்துக்கு வெளியே மாற்றுவது அவசியம். இதனால் விசாரணை பாதிக்கப்படாது, சட்டம் தனது கடமையை தொடர்ந்துசெய்யும். வழக்குகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதற்கு முன்னுதாரங்கள் உள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
சங்கராச்சாரியாருக்கு செய்யப்பட்ட அநீதி வேறு எந்த மதத்தின் தலைவருக்கும் நேர்ந்திருக்காது என்றார்.
உமா பாரதி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்று கேட்டபோது, அவர் இப்போது விடுமுறையில் தான்போயிருக்கிறார் என்றார். இதனால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
முன்னதாக பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்துத்துவாவும் இந்திய தேசியமும் ஒன்று தான் என்றார்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மக்களவைத் தேர்தல் தோல்வியை கட்சி ஏற்கிறது. ஆக்கப்பூர்வமாக எதிர்க் கட்சியாகசெயல்பட்டு மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவாம் என்று கூறப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் நியமிக்கப்பட்டார். கடந்த பா.ஜ.க.ஆட்சியின்போது பொடா வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.
பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த இவர், வாஜ்பாய்க்கே தெரியாமல் அத்வானியின் உத்தரவால் இந்த மனுவை தாக்கல்செய்யக் காரணமாக இருந்ததாக மதிமுக குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.