ஜெ. அவதூறு வழக்கு: நெப்போலியனுக்கு சம்மன்
செங்கல்பட்டு:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் நெப்போலியன் எம்.எல்.ஏ, சந்திரசேகர் மற்றும் பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏ. ஆகியயோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஏப்ரல் 25ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் வையாநல்லூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் நெப்போலியன் பேசினார். அப்போது அவர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி திருவள்ளூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர், பரிதி இளம்வழுதி ஆகியோர் மீதும் இதேபோல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.
நெப்போலியன் வருகிற 29ம் தேதியும், சந்திரசேகர், பரிதி இளம்வழுதி ஆகியோர் அடுத்த மாதம் 16-ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது