காஞ்சி எஸ்பியானார் பிரேம் குமார்: டேவிட்சனுக்கு கல்தா!
சென்னை:
கடலூர் மாவட்ட எஸ்.பியான பிரேம்குமார் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் எஸ்.பியான டேவிட்சன் தேவாசிர்வாதம் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சங்கராச்சாரியார் கைது விவகாரத்தை விசாரித்து வரும் முக்கிய அதிகாரி பிரேம் குமார். இவர் முன்பு காஞ்சிபுரம் எஸ்.பியாகஇருந்துவிட்டு கடலூருக்கு மாற்றலான மறுநாள் தான் சங்கரராமன் கொலை நடந்தது. காஞ்சிபுரத்தைவிட்டு இவர் கிளம்பும்முன்பே இந்தக் கொலை நடந்துவிட்டதால், அதை இவர் தான் விசாரித்தார். விறுவிறுவென குற்றவாளிகளைப் பிடித்தார்.
கடலூர் எஸ்பியாக பொறுப்பேற்ற பின்னரும் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கையும் விசாரித்து வந்தார் பிரேம் குமார்.இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு போலீஸ் படைகளின் தலைவராகவும் பிரேம்குமார் தான் உள்ளார்.
இந் நிலையில் அவரை கடலூரில் இருந்து மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.இதற்கான உத்தரவு நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுவரை காஞ்சி மாவட்ட எஸ்.பியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகஅரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. அவர் விடுப்பில் சென்றாரா அல்லது கட்டாய விடுப்பில் செல்ல நிர்பந்திக்கப்பட்டாரா என்றுதெரியவில்லை.
சங்கராச்சாரியார் மீதான வழக்கை கிருஸ்துவ அதிகாரியான டேவிட்சன் விசாரித்தால், அது மதரீதியில் திசை திருப்பப்படலாம்என்பதால் டேவிட்சன் இந்த விவகாரத்தில் ஒதுங்கியே தான் இருந்தார்.
விசாரணையில் பிரேம்குமாருக்கு உதவிய முக்கிய அதிகாரி என்றாலும் தனது பெயர் வெளியில் அடிபடாமல் பார்த்துக்கொண்டார் டேவிட்சன்.
இந் நிலையில் டேவிட்சனுக்கு பதவி எதையும் ஒதுக்காமல் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுவது,அவருக்கு கிட்டத்தட்ட கல்தா கொடுக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
மேலும், சங்கர்ராமன் கொலை குறித்து விசாரிக்க 4 போலீஸ் குழுக்களையும் தமிழக அரசு நியமித்துள்ளது.
கடலூர் மாவட்ட எஸ்பியாக ஆவடி போலீஸ் ரெஜிமெண்ட் சென்டரின் கமாண்டரான பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.