பாஜக மீது ராமதாஸ், வைகோ கடும் தாக்கு
டெல்லி & நாகர்கோவில்:
சங்கராச்சாரியார் கைது விவகாரத்துக்கு இந்து மதச் சாயம் பூசி பிரச்சனையை திசை திருப்ப பா.ஜ.க. முயல்வதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மதத்தில் நம்பிக்கையுடையவர்களில் சிலர் ஜெயந்திரரை மதத்தின் பிரதிநிதியாக நம்புகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள்,ஆளுநர்கள் என பல தரப்பினரும் அவரை சந்திக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒருவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்வது சாதாரண விஷயமே அல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன்தகுந்த ஆதாரங்களுடன் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன் அவரை நிரபராதி என்று சொல்வதை ஏற்க முடியாது. அவரை நிரபராதிஎன்று சொல்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பிடித்துக் கொண்டு கரையேற முடியாதா என்று தவித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.கவும் அதன் கிளைகளான இந்துத்துவா அமைப்புக்கள் தான் அவரை அதற்குள்ளாகவே நிரபராதி என்கின்றன. அதைகோர்ட் சொல்லட்டுமே? ஏன் அவசரம்?
இந்த விவகாரத்துக்கு மதச் சாயத்தைப் பூசி விஷயத்தையே ஒட்டுமொத்தமாக திசை திருப்பவும் இவர்கள் முயல்கின்றனர்.
சங்கராச்சாரியாருக்காக பா.ஜ.க. டெல்லியில் நடத்திய உண்ணாவிரதத்தில் முன்னாள் பிரதமர்களான வாஜ்பாய், சந்திரசேகர் கலந்துகொண்டதில் தவறில்லை. அவர்கள் அரசியல் தலைவர்கள்.
ஆனால், அந்த உண்ணாவிரதத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஏன் வந்தார்?. ஒரு அரசியல் கட்சியின் மேடையில் ஏறிநின்று கொண்டு, ஒரு மாநில அரசு எடுத்த கிரிமினல் சட்ட நடவடிக்கைக்கு எதிராக பேசியிருக்கிறார் வெங்கட்ராமன்.
இந்தக் கைதுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று பாமர ஜனங்களுக்குக் கூடத் தெரியும். ஆனால், ஜெயலலிதாவை விட்டுவிட்டுஇந்த விவகராத்தில் மத்திய அரசைக் குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி.
மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களைக் குறை கூறுவதே ஜெயலலிதாவுக்கு வேலை. அவர்கள் கொண்டு வரும் நல்ல திட்டங்களைநிறைவேற்ற விடாமல் தடுப்பது அவருக்கு இன்னொரு வேலை.
குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக திரைமறைவில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சந்தேகம் வருகிறது என்றார்ராமதாஸ்.
வைகோ பேட்டி:
நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அனைத்துமே விளம்பரம் தேடும் வேலையாகத்தான் உள்ளது. மக்களுக்கு வாழ்வு கொடுக்கும்எண்ணமோ, கவலையோ அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
தன்னைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆட்சி செய்கிறார்.
சங்கராச்சாரியாரின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விஷயத்தை வைத்து இந்துகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே மோதலைத்தூண்ட பா.ஜ.க. முயன்றது. சங் பரிவாரங்கள் முயன்றன. ஆனால், அதில் அவர்களுக்கு பெரும் தோல்வி கிடைத்திருக்கிறது.
இந்தக் கைது நடவடிக்கையை இந்துக்கள் தங்களுக்கு விரோதமானதாக நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் பா.ஜ.கவுக்கு பரிதாப தோல்விகிடைத்துள்ளது.
இலங்கை- இந்தியா ராணுவ ஒப்பந்தம் கூடாது. இதை பிரதமரிடம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications