சோனியா மொரீஷியஸ் பயணம்
டெல்லி:
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள் மொரீஷியஸ் செல்கிறார்.
கடந்த 1995ம் ஆண்டு மொரீஷியஸில் ராஜீவ் காந்தி அறிவியல் மையத்துக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அந்த மையம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதை திறந்து வைக்க சோனியா காந்திக்கு மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரேங்கர் அழைப்புவிடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக சோனியா காந்தி அங்கு செல்கிறார்.
ராஜீவ் காந்தி அறிவியல் மையத்திற்குத் தேவையான தொழில் நுட்ப உதவி, ஆசிரியர்களையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த மையம்இந்திய- மொரீஷியஸ் நட்புறவில் புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொரீஷியஸ் பயணத்தின்போது, அந் நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் சீவோஸகர் ராம்கூலம் சமாதியில் சோனியா காந்தி மரியாதைசெலுத்துகிறார். மேலும் மொரீஷியஸ் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் தரும் மதிய விருந்திலும், பிரதமர் தரும் இரவு விருந்திலும் கலந்து கொள்கிறார். அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சித்தலைவர் நவீன் ராம்கூலத்தையும் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மொரீஷியஸ் பிரதமர் பெரேங்கர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.