மக்கள் ஆதரவை ஜெ. இழக்கிறார்: பாஜக
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மக்கள் ஆதரவை இழந்து வருவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த தமிழக அரசு, தற்போது ஜெயேந்திரருக்கு எதிரான நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காக, வேறு பல வழக்குகளைப் போட்டு வருகிறது. இது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் ஆதரவை இழந்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
கொலைக்கு முன்னும், பின்னும் பண பரிமாற்றம் நடந்ததாக முதலில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கைகளில் அரசுதெரிவிக்கவில்லை. மேலும், கூலிப் படையினருடன் ஜெயேந்திரர் செல்போனில் பேசியதாக அரசு முதலில் தெரிவித்தது. ஆனால்அதற்கான ஆதாரங்கள் எதையும் கோர்ட்டுகளில் அரசு தாக்கல் செய்யவில்லை.
ஸ்ரீரங்கம் உஷாவுடன் ஜெயேந்திரருக்கு தவறான உறவு இருப்பதாக கூறியது அரசு. ஆனால் அந்த உஷாவே போலீஸில் ஆஜராகி தனக்கும்,ஜெயேந்திரருக்கும் இடையே எந்தத் தவறான உறவும் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்.
எனவே ஜெயேந்திரருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
பாஜக தோற்றுவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகி விட்டன. இதையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்த இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதே கட்சித் தலைவர் அத்வானியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
டிசம்பர் 7ம் தேதி சென்னையில் மாநில கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மூத்த பாஜக தலைவர் பண்டாருதத்தாத்ரேயா கலந்து கொள்வார் என்றார் குமாரவேலு.












Click it and Unblock the Notifications