சிக்னலில் பஸ்சில் ஏற, இறங்க தடை
சென்னை:
சாலையில் சிக்னலுக்காக பேருந்துகள் நிற்கும்போது அதிலிருந்து ஏறவோ, இறங்கவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம்கூறியுள்ளது.
திருப்பாப்புலியூரைச் சேர்ந்தவர் குணவதி. இவர் கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அரசு பஸ்சிலிருந்து இறங்கும்போது, தவறிகீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க டயர் ஏறியதில் இறந்துபோனார்.
இதையடுத்து குணவதியின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனுசெய்தனர். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், குணவதியின் குடும்பத்துக்கு ரூ. 1.10 லட்சம் நஷ்ட ஈடு தருமாறு தந்தை பெரியார்போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிக்னலில் பஸ் நிற்கும்போது குணவதி பஸ்சிலிருந்து இறங்கினார். இதனால் இதை விபத்தாக கருத முடியாது. போக்குவரத்துக் கழகத்தின்கவனக் குறைவினால் இது நடக்கவில்லை என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர், பலியானவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ள ஆவணங்கள்மூலம், பஸ் சிக்னலுக்காக நிற்கும்போது அதிலிருந்து குணவதி இறங்கியுள்ளது உறுதியாகிறது.
எனவே தவறு அவர் மீதுதான் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது. அதே சமயத்தில் பஸ்சிலிருந்து இறங்க வேண்டாம் என்ற அந்தப்பெண்ணை பஸ்சின் நடத்துனர் தடுத்திருக்க வேண்டும்.
ஆனால் நடத்துநரோ அல்லது ஓட்டுநரோ அதைச் செய்யவில்லை, எனவே அவர்கள் தரப்பிலும் தவறு உள்ளது. எனவே பஸ்சின்நடத்துநரும், பலியான பெண்ணும் கவனக்குறைவாக இருந்ததாகவே கருத முடியும்.
இதனால், ஏற்கனவே விதிக்கப்பட்ட நஷ்டஈட்டில் பாதித் தொகையை குறைத்து, ரூ. 55,000மட்டும் பலியானவர் குடும்பத்துக்குக்கொடுத்தால் போதுமானது என்று உத்தரவிடுகிறோம்.
பஸ் நிறுத்தங்களைத் தவிர வேறு இடங்களில், அதாவது சிக்னலுக்காக பஸ் நிற்கும்போது பயணிகள் ஏறவோ, இறங்கவோ கூடாது. அதைநடத்துநரும், ஓட்டுநரும் அனுமதிக்கக் கூடாது. அப்படி மீறி பயணிகள் ஏறும்போதோ, இறங்கும்போதோ விபத்து நடந்தால் அதற்குபோக்குவரத்துக் கழகம் பொறுப்பாகாது என்றனர் நீதிபதிகள்.