சென்னைக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர்
சென்னை:
கொள்ளிடம் ஆற்றிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு வருகிற 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்நாட்டவுள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்தை சமீபத்தில் ஜெயலலிதா வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந் நிலையில் மேலும்ஒரு குடிநீர் திட்டத்திற்கு வருகிற 14ம் தேதி ஜெயலலிதா அடிக்கல் நாட்டவுள்ளார்.
காவிரி ஆற்றில் கொள்ளிடத்திலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் இந்த திட்டத்தின் கீழ், கொள்ளிடம் பகுதியில் 6 ராட்சதகிணறுகள் தோண்டப்படவுள்ளன. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சேத்தியாத் தோப்புக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
அங்கு ஏற்கனவே உள்ள புதிய வீராணம் திட்டக் குழாயுடன், கொள்ளிடம் திட்டக் குழாய் இணைக்கப்படுகிறது. பின்னர்கொள்ளிடத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் புதிய வீராணம் குழாய்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்படும்.
இந்தத் திட்டத்திற்காக கொள்ளிடத்திலிருந்து சேத்தியாத்தோப்பு வரை 102 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சத குழாய்கள்அமைக்கப்படவுள்ளன. கொள்ளிடம் திட்டம் மூலம் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு வரப்படும்.
இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.