உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு தாக்கல்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று சங்கராச்சாரியார் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து இந்த மனுவை ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ளார். ஜெயேந்திரரின்ஒப்புதலுடன் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், போலீஸ் மற்றும் அரசுத் தரப்பு எடுத்து வைத்த வாதத்தை முழுமையாக ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொண்டுசென்னை உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை தமிழக போலீசார் சமர்பிக்கவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான பாலி நரிமன், ஹரிஷ் சால்வே, கிருஷ்ண குமார் ஆகியோருடன் ஜெயேந்திரரின்வழக்கறிஞர் கிருஷ்ணமணி கடந்த இரு நாட்களாக மிகத் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் இன்று இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடிசெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலும் அவரது ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.