எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது: கி.வீரமணி
காஞ்சிபுரம்:
வழக்கு விவகாரங்களால் காஞ்சி சங்கர மடம் சங்கட மடமாகிள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதை வாசகம் இப்போது ஜெயேந்திரருக்குப் புரிந்திருக்கும். வழக்குகளால் சங்கர மடம் இப்போது சங்கட மடமாக இருக்கிறது.
ஜெயேந்திரர், தான் ஓடிவிட்டு திரும்பி வந்த காலத்தை மறைத்துவிட்டு 50 ஆண்டு காலமாக பீடாதிபதியாக இருக்கிறேன் என்கிறார். அதே நேரத்தில் ஜெயேந்திரர், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதை மறைக்காதவர். நெருக்கடி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு பதுங்கு குழியாக சங்கர மடம் இருந்தது.
மகா பெரியவருக்கும் ஜெயேந்திரருக்கும் வித்தியாசம் உண்டு. அவருக்கு பெண், பொன் ஆசை இருந்ததில்லை.
இந்த மடம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறுவதில் உண்மையில்லை. இது சங்கரர் நிறுவிய மடமே அல்ல. சங்கரர் வாழ்ந்து மறைந்தது 8ம் நூற்றாண்டு என்றால், இந்த மடம் எப்படி 2,500 ஆண்டுகள் பழமை உடையது ஆகும்?. இது குறித்து எந்த மடாதிபதியுடனும் நான் தனியே வாதாடத் தயார்.
சங்கரராமனின் மனைவி கேட்கிறார், ஒரு கொலைகாரனை எப்படி இந்து மதத் தலைவராக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று. போலீஸார் இந்த வழக்கை நுணுக்கமாக விசாரித்து வருகிறார்கள்.
நடிகைகள் பலர் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்கள். முற்றும் துறந்த ஒரு முனிவரே இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார் என்றார் வீரமணி.