அப்புவை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு
காஞ்சிபுரம்:
சி கூலிப் படைத் தலைவன் அப்புவை சந்திக்க வந்த அவனது வழக்கறிஞரை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.
காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அப்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, அப்பு போலீஸ் காவலில் இருக்கும் நாட்களில்தினமும் 1 மணி நேரம் அவனது வழக்கறிஞர் சந்தித்துப் பேச நீதிபதி உத்தமராஜன் அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர் தன்னை வந்து சந்திப்பார் என்று நீதிமன்றத்தில் அப்பு தெரிவித்தார்.
இந் நிலையில் போலீஸ் காவலில் முதல் நாளான நேற்று மாலை காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்றார்.அவரை சுமார் 1 மணி நேரம் காக்க வைத்த போலீஸார் பின்னர் நீதிமன்ற உத்தரவு நகல் இருக்கிறதா என்று கேட்டனர்.
நீதிமன்ற உத்தரவு நகலைப் பெற்று வர காலதாமதம் ஆகும் என்பதால்தான் நகல் இல்லாமல் வந்துள்ளதாகவும், அப்புவை சந்திக்கநீதிபதியே உத்தரவிட்டுள்ளதால் சந்திக்க அனுமதிக்குமாறும் கோரினார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவு நகல் இல்லாமல் அப்புவை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறி போலீசார் அவரைத் திருப்பிஅனுப்பிவிட்டனர். இதனால் அவர் சிறிது நேரம் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.