மதுரை: நகைக் கடையில் தீக்குளித்த பெண் ஊழியர்
மதுரை:
மதுரையில் பிரபல நகைக் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர், அந்தக் கடையிலேயே தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை கான்சா மேட்டுத் தெரு அருகே உள்ளது ஆர்.எம்.அப்பாவு நகைக் கடை. 98 வருடங்களாக செயல்பட்டு வரும் நகைக் கடை இது.மதுரையின் மிகப் பிரபலமான நகைக் கடைகளில் இதுவும் ஒன்று.
இந்தக் கடையில் கடந்த 7 வருடங்களாக ராஜேஸ்வரி (வயது 30) என்ற பி.காம் படித்த பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்துவந்தார்.
நேற்று பிற்பகலில் ராஜேஸ்வரி, தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அறையை பூட்டிக் கொண்டு மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
உடல் கருகிய நிலையில் அறைக்குள் அங்குமிங்கும் ஓடிய அவர் சிறிது நேரத்தில் உயிழந்தார். தீயணைக்குப் படைக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து அறையில் பரவிய தீயை அணைத்தனர்.
மிகவும் பரபரப்பான தெருவில் உள்ள நகைக் கடைக்குள் பட்டப் பகலில் நடந்த இந்த தீக்குளிப்புச் சம்பவம் அப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications