தமிழக கடலோரத்தை கபளீகரம் செய்த சுனாமி
சென்னை:
தமிழகத்தைத் தாக்கியுள்ள இந்த கடல் கொந்தளிப்பு சுனாமி என்று அழைக்கப்படும் மாபெரும் இயற்கைச் சீற்றமாகும்.
சிலி நாட்டில் இருந்து ஜப்பான் வரை பசிபிக் கடலின் பல பகுதிகளையும் வழக்கமாகத் தாக்கி வரும் ராட்சச அலைகளான சுனாமிஇந்தியாவைத் தாக்குவது இதுவே முதன்முறையாகும்.
ஜப்பானும் இந்தோனேஷியாவும் பல முறை இந்த சுனாமியின் தாக்குலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
இன்று காலை இந்தியப் பெருங்கடலுக்குள் ஏற்பட்ட மாபெரும் நில நடுக்கத்தால் இந்த பேரழிவு கொண்ட அலைகள் உருவாயின.கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற சம்பவங்களின்போது இந்த சுனாமி அலைகள் உருவாகும்.
கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும்போது அப் பகுதியில் உள்ள நீர் அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் பரவும். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு பாய்ந்து செல்லும் இந்த நீர் தரைப் பரப்புகளை அடைந்தவுடன் பேய் அலைகளாக மாறி தரைப் பகுதியை நோக்கிப்பாயும்.
சுனாமி உருவாகும்போது ஒட்டுமொத்த கடலே கொந்தளிக்க ஆரம்பித்துவிடும். மணிக்கு 750 கிலோ மீட்டர் வேரத்தில் 50 முதல் 100 அடிஉயரத்துக்குக் கிளம்பும் இந்த அலை தரைப் பரப்பில் புகும்போது அதன் தாக்குதலில் இருந்து யாரும் தப்புவது சாத்தியமே இல்லை.
கடலுக்கு அடியில் இந்த அலைகள் வேகமாக ஓடி வந்து, கரையைக் கடக்ககையில் இன்னும் வேகம் எடுத்துப் பாயும்.
இது தான் இன்று தமிழகம் உள்ளிட்ட இந்தியக் கடலோரப் பகுதிகளிலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான், இந்தோனேஷியா,தாய்லாந்தில் நடந்தது.