கண் மூடாமல் காத்திருந்த கடலோர மக்கள்
சென்னை:
நேற்று காலை கடல் அன்னையின் கோர தாண்டவத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின. கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குள்நடந்து முடிந்து விட்ட இந்த கடல் கொந்தளிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து விலகவில்லை.
நேற்று இரவு முழுவதும் சென்னை கடலோரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தூங்கவில்லை. அனைவரும் ஆங்காங்கேகூடியிருந்து மீண்டும் ஒரு கொந்தளிப்பு வருமா, வராதா என்று கவலையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
வீடிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு அமைத்த தாற்காலிக இடங்களில் தங்கவில்லை. கடல் கொண்டு போனது போக,மிச்சமிருந்த பொருட்களைத் தலையில் சுமந்தவாறு கடலுக்கு எதிர்ப்புறமாக நடக்கத் தொடங்கினர்.
ஏற்கனவே ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டு மாநகராட்சிப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டஇடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களும் தூங்கவில்லை.
பகலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், காணாமல் போன, மாண்டு போன தங்களது குடும்பத்தினர், உறவினர் குறித்து அனைவரும்சோகத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
இன்னும் சில நாட்களுக்கு இவர்களுக்கு நிச்சயம் தூக்கம் வராது. அந்த அளவுக்கு கடல் கொந்தளிப்பின் பாதிப்பு இவர்களை நிலை குலையவைத்து விட்டது.
இவர்களின் சோகத்தில் பங்கு கொள்ளும் விதமாக அண்ணா சமாதியும், எம்ஜிஆர் சமாதியும் தண்ணீர் வெள்ளத்தில் மெளனமாக மிதந்துகொண்டிருந்தன.