விஜயேந்திரர், ரவியிடம் ஒரே நேரத்தில் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மற்றும் ரவிசுப்ரமணியத்தை ஒரே இடத்தில் உட்கார வைத்து இருவரிடமும் போலீசார் மாறி மாறி விசாரணை நடத்தினர்.
விஜயேந்திரரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. இது இவரிடம் நடத்தப்பட்டுள்ள 2வது விசாரணையாகும்.
முன்னதாக இன்று காலை விசாரணைக்காக அவர் காட்டுப் பங்களாவிற்கு வந்தபோது அவருடன் கூடவே சங்கர மடத்தைச் சேர்ந்த 15க்கும்மேற்பட்டோர் வந்தனர். அப்போது விஜயேந்திரர் வந்த காரை வளாகத்துக்கு வெளியிலேயே நிறுத்த சொன்ன போலீசார் உள்ளே நடந்துபோகுமாறு கூறினர்.
இதற்கு விஜயேந்திரருடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமி காரில் தான் வருவார் என்றனர். அதெல்லாம் முடியாது நடந்து தான்போக வேண்டும் என்று போலீசார் கூறியதால் காட்டு பங்களாவை நோக்கி விஜயேந்திரர் நடந்தார். கூடவே அவருடன் வந்த 15 பேரும்உள்ளே புக முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விசாரணையின்போது நாங்களும் உடன் இருப்போம் என்று அவர்கள் கூற, அதை அனுமதிக்க முடியாது என்று கூடுதல் எஸ்.பி. சக்திவேல்கூறினார். ஆனால், விஜயேந்திரருடன் வந்தவர்கள் சக்திவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உடனடியாக இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள் என்று அவர்களுக்கு சக்திவேல் உத்தரவிட்டார். விஜயேந்திரரைத்தவிர வேறு ஒருவரும் விசாரணை நடக்கும் கட்டடத்துக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றார் கண்டிப்புடன். மீறினால் நடவடிக்கைஎடுப்பேன் என சக்திவேல் கூறியதையடுத்து 15 பேரும் பின் வாங்கினர்.
ஆனால், சுவாமியின் மரக் கட்டை செருப்பையும், அவர் உட்காரும் மர ஸ்டூலையும் விசாரணை பங்களாவுக்குள் கொண்டு செல்லஅனுமதிக்க வேண்டம் என்று அவர்கள் கோரினர். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்ட போலீசார், நாங்கள் கொடுக்கும்நாற்காலியில் தான் அவர் உட்கார வேண்டும் என்றனர்.
இதையடுத்து தன்னுடன் வந்தவர்களை சமாதானப்படுத்திய விஜயேந்திரர் வெறும் காலுடன் பங்களாவுக்கு நடந்து சென்றார். அவரிடம்காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது.
விஜயேந்திரருடன், ரவி சுப்பிரமணியத்தையும் அதே அறையில் அமர வைத்து எஸ்.பி.பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள்விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
விசாரணை முடிந்து பகல் 2.05 மணியளவில் விஜயேந்திரர் வெளியே வந்தார். கடந்த முறை சிறிது நேரமே நடந்த விசாரணை இம் முறை 3மணி நேரம் நீடித்துள்ளது.
ரகுவிடமும் விசாரணை:
இதற்கிடையே விஜயேந்திரரின் தம்பி ரகுவிடமும் இன்று மாலை விசாரணை நடத்தப்படவுள்ளது. அவர் கைதாகலாம் என்றும் தெரிகிறது.
இருவர் ரகசிய வாக்குமூலம்:
இதற்கிடையே கடந்த 03.09.04 அன்று நடந்த சங்கரராமன் கொலையை நேரில் பார்த்த சீனிவாசன் என்பவரும் கொலையாளிகள் வந்த வாகனத்தைப்பார்த்த சங்கரராமனின் பக்கத்து வீட்டுக்காரரான சரவணன் என்பவரும் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
இதில் சீனிவாசன் வரதராஜ பெருமாள் கோவில் வாயிலில் பூ வியாபாரம் செய்து வருபவராவார்.












Click it and Unblock the Notifications