புத்தாண்டு: பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஜெ கோரிக்கை
சென்னை:
நாளை ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. வழக்கம் போல சந்தோஷமாக கொண்டாட முடியாத அளவுக்குஅனைவரின் மனதையும் கனக்க வைக்கும் வகையில் சுனாமி அலைகள் தாக்குதல் தமிழகம் உள்ளிட்ட ஆசியநாடுகள் பலவற்றை உலுக்கிப் போட்டுவிட்டது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில்,
நடந்து முடிந்த 2004ம் ஆண்டு நம் நினவை விட்டு அகலாத ஆண்டாக கடந்து சென்றுள்ளது. பல்வேறுசாதனைகளையும், சரித்திரத்தையும் படைத்த அதே 2004ம் ஆண்டுதான், சோகத்தையும், வேதனையையும்விதைத்து விட்டுச் சென்றுள்ளது.
நீலக்கடல் அருகே நிம்மதியாக வாழ்ந்த மக்கள், ஆழிப் பேரலையால் அழிக்கப்பட்டு விட்டனர்.
துயர்ப்படும் மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்றார்உறவினரை மட்டுமல்லாது வாழ்க்கையையும் தொலைத்து விட்டு வாடி நிற்கும் சகோதர, சகோதரிகளின் வாட்டம்போக்க அனைவரின் ஒத்துழைப்பும், உதவியும் தேவை.
இந்தப் பேரிடர் தீர்க்கும் பெரும் பணிக்கு அனைவரும் நல் மனதுடன் உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வரும் புத்தாண்டு புதிய நம்பிக்கையை அளிக்கும் புத்தாண்டாக இருக்கட்டும். புத்தெழுச்சி மலரட்டும், புது மலர்ச்சிகிடைக்கட்டும், புது வளர்ச்சி வழங்கட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆளுநர் வாழ்த்து:
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ள செய்தியில்,
சுனாமி அலைகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது தெற்காசிய மக்களும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரும் துயரை தாங்கும் ஆற்றலைப் பெற்று, வருகிற புத்தாண்டில் அமைதியும்,வளம் நிறைந்த புதிய வாழ்க்கையை தமிழக மக்கள் தொடங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.