ஜெ. வீட்டை முற்றுகையிட வந்த மீனவர்கள்
சென்னை:
நிவாரண உதவி கிடைக்காததால் சென்னை அருகே உள்ள கோவளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் முதல்வர்ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
காஞ்சி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமமான கோவளத்தைச் சேர்ந்த மக்கள், சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எந்தநிவாரணமும் கிடைக்கவில்லை என்று ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க சென்னை வந்தனர்.
கோபத்தில் இருந்த அவர்கள் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிடத் திட்டமிட்டனர். இதனால் அவர்களை போலீஸார் போயஸ் கார்டன்நுழைவிடத்திலேயே தடுத்து நிறுத்தி வைத்தனர்.
முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்கப்போவதாக அவர்கள் கூறவே, போலீஸார் போயஸ் கார்டன் பகுதிக்குள் அனுமதித்தனர். முதல்வரின்வீட்டின் முன் மனு கொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்களை நிற்க வைத்தனர்.
ஆனால், மீனவர்கள் அதிக அளவில் வந்துள்ள தகவல் அதிகாரிகளுக்குப் பறந்தது. மேலும் விஷயம் அறிந்து நிருபர்களும் ஏராளமானஅளவில் குவிந்துவிட்டனர்.
இதையடுத்து மீனவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை அங்கிருந்து அகற்றி விடுமாறு காவல் துறையினருக்கு அவசரஉத்தரவு பிறப்பித்தனர் அதிகாரிகள்.
இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மீனவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட போலீசார்அவர்களை வேன்களில் ஏற்றி நீண்டதூரம் போய் இறக்கிவிட்டுவிட்டு வந்தனர். நாங்கள் முதல்வரை சந்தித்தே தீருவோம் என்று கூறியமீனவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி வேன்களில் ஏற்றிச் சென்றனர்.
இதனால் முதல்வரைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த மீனவர்கள் புலம்பியபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர்.