மேலும் ஒரு வழக்கில் சுந்தரேச அய்யர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்தின் கணக்கு வழக்குகளைத் திருத்தியதாக புதிய வழக்கு ஒன்றில் காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேசஅய்யர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சி மடத்தில் கணக்காளராக இருந்த காலடி விஸ்வநாதன், சங்கரமட கணக்கு புத்தகத்தில் பக்கங்களை கிழித்துஅப்புறப்படுத்தியதாகவும், அடித்து திருத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 6பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுந்தரேச அய்யரின் தூண்டுதலினால்தான் மடத்தின் கணக்குப் புத்தகத்தை திருத்தியதாக விஸ்வநாதன் போலீஸ் விசாரணையில்தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் காஞ்சீபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜிடம் சுந்தரேச அய்யரைகைது செய்வதற்கான ஆவணங்களைக் காட்டி வாரண்ட் வாங்கினர்.
சங்கரராமன் கொலை வழக்கிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஏற்கனவே சுந்தரேச அய்யர் கைதாகிசென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை புதிய வழக்கிலும் கைது செய்வதற்கான வாரண்டுடன் போலீஸார் சென்னை மத்திய சிறைக்கு வந்தனர். சிறைக்கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தியிடம் வாரண்டு நகலை காட்டி கணக்கு புத்தகத்தை திருத்திய வழக்கில் சுந்தரேச அய்யர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கைதான சுந்தரேச அய்யர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
அய்யருக்கு பரோல்:
இந் நிலையில் சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சுந்தரேச அய்யர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பரோலில் வெளியே செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சுந்தரேச அய்யரின் சகோதரர் தியாகராஜன் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ளஅனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யர் சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பரிசீலித்த நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுந்தரசே அய்யரை பரோலில்விடுதலை செய்ய உத்தரவிட்டார்.