ராஜபாளையம் நாய்களுக்கு புது கெளரவம்
சென்னை:
பிரபலமான ராஜபாளையம், கோம்பை நாய்களை கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுள்ளது.
இந்திய நாய்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்து வந்த 3 நாள் தேசிய நாய்க் கண்காட்சி
நிறைவு பெற்றது. 3 நாள் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான நாய்கள் கலந்து கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தன. நாய்களுக்காக பல்வேறுபோட்டிகளும் நடத்தப்பட்டன.
நிறைவு நாளன்று இந்தியாவைச் சேர்ந்த நான்கு வகையான நாய்களை கெளரவப்படுத்தும் வகையில் நினைவு தபால் தலைகளை மத்தியதகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டார்.
ராம்பூர் நாய், இமாலயன் ஷீப் ரக நாய், கோம்பை நாய், ராஜபாளையம் நாய் ஆகியவைதான் இந்த
பெருமையைப் பெற்ற நாய்கள். இந்தியாவில் நாய்களைப் போற்றி தபால்தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து இந்திய நாய்கள் சங்கத் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், இந்திய நாய்களை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மிகச் சிறந்த தன்மைகள் கொண்ட இந்திய நாய்கள் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையை மாற்றும் பொருட்டே நான்கு வகையான இந்திய நாய்களைக் கெளரவப்படுத்தி தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளதுஎன்றார். நிகழ்ச்சியில் தபால் தலைகளை வெளியிட்ட தயாநிதி மாறனுக்கு லேப்ரடார் வகை நாய்க் குட்டி பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்நாய்கள் சங்கம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் தயாநிதி மாறனிடம் பாலசுப்ரமணியம் வழங்கினார்.