ஜெயேந்திரருக்கு ஜாமீன்: நாளை விடுதலை?
வேலூர்:
ஜெயேந்திரர் வேலூர் சிறையிலிருந்து நாளை விடுதலையாகி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்ட ஜெயேந்திரருக்கு, சங்கரராமன் கொலைவழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விரைந்தனர். உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் நகல் செங்கை நீதிமன்றத்திற்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டதாக வந்த தகவலையடுத்து அவர்கள் அங்கு சென்றனர்.
ஆனால் மாலை வரை காத்திருந்தும் உத்தரவு வரவில்லை. இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர். இந் நிலையில், ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் தொடர்பான நிபந்தனைகளை இன்னும் உயர்நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
அந்த நிபந்தனைகளை நீதிபதி ஆர்.பாலசுப்ரமணிம் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்றேமுடிவடைந்தாலும் கூட ஜெயேந்திரர் இன்று விடுதலையாக மாட்டார் என்று கூறப்படுகிறது.
காரணம் இன்று நல்ல நாள் இல்லை என்பதால் புதன்கிழமையான நாளைதான் அவர் விடுதலையாகி வருவார் என்று அவரதுவழக்கறிஞர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து கிருஷ்ணசாமி நேற்று காலை வேலூர் சிறைக்குச் சென்றார். இருப்பினும் ஜெயேந்திரர் மெளனவிரதம் கடைப்பிடித்ததால் அவருடன் பேச முடியவில்லை.
பாஸ்போர்ட் தாக்கல் செய்வதில் சிக்கல்:
இதற்கிடையே ஜெயேந்திரரின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துஜெயேந்திரரின் வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், ஜெயேந்திரரின் பாஸ்போர்ட் கடந்த 1999ம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. அதற்குப் பிறகு அவர் பாஸ்போர்ட்டை புதுப்பித்தாரா என்பது தெரியவில்லை.
புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் இருந்தால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இல்லாவிட்டால் ஜெயேந்திரரிடமிருந்து ஒருபிரமாணப் பத்திரம் வாங்கி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றார் தியாகராஜன்.












Click it and Unblock the Notifications