சட்டப்படியான நடவடிக்கை: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
விஜயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பதால் மடத்தில் அன்றாடம் நடைபெறும் பூஜை பாதிக்கப்படும் என்று கூறுவது தேவையற்றஅச்சமாகும். இதற்கு முன்பு ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் பல முறை மடத்தை விட்டு வெளியூர் பயணம் சென்றிருக்கின்றனர்.
அப்போதெல்லாம் அன்றாட பூஜைகள் நடைபெற வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே இப்போது மட்டும் அவை பாதிக்கப்படும்என்று கூறுவதை ஏற்கமுடியாது.
இந்த கைது நடவடிக்கை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோதுஇவ்வாறே கூறினார்கள். ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை பொதுமக்கள்பாராட்டுகிறார்கள்.
கோயிலுக்குள் படுகொலை செய்த கூலிப்படையினருக்கு பணம் விநியோகம் செய்த மற்றும் கொலைத் திட்டம் தீட்டிய மடாதிபதிகளுக்குவிசேஷ சலுகைகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் வாதிட முடியாது.
பாரபட்சமற்ற முறையில் எந்தவித உணர்வுகளுக்கும் ஆட்படாமல் இந்த வழக்கை நடத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் சமூகத்தில் எத்தகைய பெரிய மனிதராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைப்படி தமிழகஅரசு செயல்படுகிறது. தமிழக காவல்துறையும் தனது பாராபரிய பெருமையை நிலைநாட்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.