சென்னை சைதாப்பேட்டையில் இரவு முழுவதும் தொடர் மின் வெட்டு.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் 5 மணி நேர மின்வெட்டு நிலவியதால், மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு, ஆங்காங்கே பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதும், சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருவது, அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவது பொது மக்களுக்கு இன்னல் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று இரவு 8 மணி முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் வெட்டு நீடித்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் திரண்டு மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினமும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது என்றும், நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமும் 1 மணி வரை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் தூங்க முடியவில்லை. வயதானவர்கள் தூங்க முடியவில்லை. நோயாளிகள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். மின்வாரிய செயற்பொறியாளர் எங்கள் போனை எடுப்பதே இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications