அராஜக வழியில் தமிழக அரசு: சுஷ்மா
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு மத நிறுவனத்தின் மீதான தாக்குதலாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் அவரை வரவேற்க சுஷ்மாஸ்வராஜ் இன்று தமிழகம் வந்தார். சென்னையில் இருந்து வேலூர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
சங்கரராமன் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அதேவழக்கில் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது ஒரு மத நிறுவனத்தின் மீதான தாக்குதல் ஆகும். இந்த கைது மூலம் 2,500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பூஜை தடைப்பட்டுள்ளது. அராஜகவழியில் தமிழக அரசு செல்கிறது என்று தெரிவித்தார்.
மீண்டும் ஒரு சுனாமி: பண்டாரு
இந் நிலையில் தமிழக பாஜக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் பண்டாரு தத்தாத்ரேயா, பொதுச் செயலாளர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தத்தாத்ரேயா கூறியதாவது:
ஜெயேந்திரருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா காஞ்சிபுரத்திற்கு சென்றார். ஹெலிபேடுபகுதிகக்கே எஸ்.பி. பிரேம்குமாரை அழைத்து விஜயேந்திரரைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார்.
இதன் மூலம் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இது ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டமற்றொரு சுனாமி என்று கூறினார்.