விசாரணைக்கு வர ஜெயேந்திரர் மறுப்பு: சம்மனை வாபஸ் பெற்றது போலீஸ்
காஞ்சிபுரம்:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு காஞ்சிபுரம் போலீசார்அனுப்பிய சம்மனை ஏற்க ஜெயேந்திரர் மறுத்துவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள ஜெயேந்திரர் கலவையில்உள்ள சங்கர மடத்தில் தங்கியுள்ளார். அவரை திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவிசாரணைக்கு வருமாறு கூறி காஞ்சி தனிப்படை போலீஸார் நேற்றிரவு சம்மன் வழங்கினர்.
இந்தச் சம்மன் வந்து சேர்ந்ததை மடத்தின் வழக்கறிஞர் ரேவதி வாசுதேவன் உறுதிப்படுத்தினார்.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு ஜெயேந்திரர் விசாரணைக்குவந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயேந்திரர் வரவில்லை.
அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் சண்முகம் தான் காஞ்சிபுரம் காட்டு பங்களாவுக்கு வந்தார். உள்ளேசென்று போலீஸ் அதிகாரிகளை சந்தித்துவிட்டுத் திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
போலீசார் அனுப்பிய சம்மன் இந்திய குற்றவியல் சட்டப்படி செல்லாது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சாட்சிமாதிரி அடிக்கடி கூப்பிட்டு விசாரிக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக தனது முந்தைய தீர்ப்புகளில்சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் சங்கராச்சாரியார் இப்போது தங்கியிருப்பது வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள மடத்தில். அந்தப் பகுதிகாஞ்சிபுரம் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே வராது. இதனால் காஞ்சிபுரம் தனிப் படை போலீசார் அனுப்பியசம்மன் செல்லாது. இதை ஏற்க வேண்டிய அவசியமே சங்கராச்சாரியாருக்கு இல்லை.
சம்மன் வாபஸ்:
இந்த விஷயங்களை நான் போலீஸ் அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டினேன்.
இதையடுத்து அரசு வழக்கறிஞருடன் பேசிவிட்டுச் சொல்வதாக போலீசார் கூறிவிட்டனர். மேலும் தாங்கள்அனுப்பிய சம்மனை அவர்கள் வாய்மொழியாக திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
முதலில் சம்மனை ஏற்று விசாரணைக்கு வருவதாகத் தான் ஜெயேந்திரர் இருந்தார். ஆனால், திரிகால பூஜையைமுடித்துவிட்டு மாலை 3.30 மணிக்கு வருவதாக போலீசாரிடம் ஜெயேந்திரர் சார்பில் தெரிவித்தோம்.
அதை ஏற்க விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி. சக்திவேலு மறுத்துவிட்டார். 11 மணிக்குள் ஆஜராகியே தீரவேண்டும் என்றார். இதன் பிறகு தான் சட்டப்படியாக சம்மனை நிராகரிப்பது என்ற முடிவுக்கு வந்தோம் என்றார்.
வழக்கறிஞர் சண்முகம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்ததைத் தொடர்ந்து சம்மன் வாபஸ் பெறப்படுவதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஜெயேந்திரரை விசாரணைக்கு அழைக்கும் எண்ணம் இல்லை என்றும் காஞ்சிபுரம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலவை மேலாளருக்கும் சம்மன்:
இதேபோல கலவை சங்கர மட மேலாளர் நாகராஜனுக்கும் இன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சம்மனைகாஞ்சிபுரம் காவல்துறையைச் சேர்ந்த போலீஸ்காரர் பூபதி நேற்று இரவு நாகராஜனிடம் வழங்கினார்.
இதையடுத்து அவர் தனிப்படை போலீஸார் முன் இன்று ஆஜரானார்.
காட்டுப் பங்களாவில் வைத்து அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.